Popular Posts

Monday, September 21, 2015

தஸ்யு - மூன்று உருவகங்கள்



            தஸ்யுக்கள் என்போர் வேற்று இனத்தவர் அல்ல என்பதை அறிந்து கொண்டோம். பின் அவர்கள் யார்? இந்திரன் முதலானோர் ஆர்யர்களுக்காக தஸ்யுக்களை அழித்தனர் என வேதம் கூறுகிறது. தஸ்யுக்கள் ஆர்யர்களுக்கு இழைத்த தீங்கு என்ன? எதற்காக அவர்கள் அழிக்கப்பட்டனர்?
            தஸ்யுக்கள் பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று பார்த்தோம். அவர்களில் விருத்திரன் என்பவன் மலைப் பாம்பு வடிவத்தில் நீர் வரும் வழியில் படுத்துக் கொண்டு நீரைத் தடுத்தான். வலன் என்பவன் ஆர்யர்களுக்குச் சொந்தமான பசுக்களைச் சிறைப் பிடித்து வைத்திருந்தான். பெயர் குறிப்பிடப்படாத சில தஸ்யுக்கள் ஆர்யர்களுக்குச் சொந்தமான ஒளியைத் திருடிக் கொண்டனர். இந்திரன் விருத்திரனைக் கொன்று ஆறுகளைப் பெருகச் செய்தார். வலனைக் கொன்று பசக்களை மீட்டார். மற்ற தஸ்யுக்களைக் கொன்று ஒளியை மீட்டார்.
            ஒளியை யார் திருட முடியும் என்று சிந்திக்கும்பொழுது இது ஒரு உருவகமாகத் தான் இருக்க வேண்டும் என்பது தெரிகிறது.
சாயணர் அளிக்கும் உருவகப் பொருள்- மேகம்
            விருத்திரன் என்பது மேகங்கள். இந்திரன் தன் நண்பர்களாகிய மருத் என்னும் காற்றின் துணை கொண்டு அதை அழித்து மழை பொழிய வைக்கிறார் என்கிறார் சாயணர். கறுத்த மேகத்தினூடே மின்னல் மின்னுகிறது. இடி இடிக்கிறது. மழை பொழிகிறது. வானம் வெளி வாங்குகிறது. மறைந்து இருந்த சூரியன் வெளிப்படுகிறது. இந்திரனை மின்னல் இடியை ஆயுதமாகக் கொண்டவர் என்பதிலிருந்து இது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
            பசுக்கள் என்பதற்கு ஒளிக் கிரணங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் சாயணர். இதுவும் பொருத்தமே. ஏனெனில் வேதத்தில் பல இடங்களில் சூரிய கிரணங்களும் வைகறை ஒளியும் பசுக்களாக உருவகிக்கப்பட்டுள்ளன.
            ஆனால் சாயணரின் இக்கருத்தை ஏற்றுக் கொள்வதில் ஒரு இடைஞ்சல் உள்ளது. பசுக்களை (சூரிய கிரணங்களை) மேகம் மறைத்ததை தஸ்யு திருடினான் என்று கொண்டால் சரமா என்னும் நாயின் உதவியால் அங்கிரஸ் முனிவர்கள் பசுக்களின் இருப்பிடத்தை அறிந்தனர் என்பதை எப்படிப் பொருள் கொள்வது
உருவகம் -2 நிலச்சரிவு
            இதோ மற்றொரு ஊகம். இது சாயணர் கூறாதது.
            மலைப் பிரதேசங்களில் நிலச் சரிவு என்பது வழக்கமான ஒன்று. சில சமயங்களில் இந்த நிலச் சரிவு நதிகளில் விழுந்து நதிகளின் போக்கைத் தடுத்து விடும் அல்லது மாற்றி விடும். 2008 மே 12இல் சீனாவில் வென்சுவான் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச் சரிவு, ஒரு நதியைத் தடுத்து அதை ஏரியாக மாற்றி விட்டது. நதியின் கீழ்புறம் வறண்டுவிட்டது. ஏரியில் மேலும் மேலும் தண்ணீர் வந்து சேரவே அது வேறு திசைகளில் உடைப்பு எடுத்துப் பெருகக் கூடிய அபாயம் ஏற்பட்டது. அப்பொழுது சீன அரசு அங்கு உடனடியாக ஆட்களை அனுப்பிஅந்த ஏரிக்கரையை குண்டு போட்டு உடைத்து நதியை முன்பு போல ஓடச் செய்தது.
            இந்திரன் செய்ததும் இது போலத் தான் இருக்க வேண்டும். விருத்திரன் என்பது நிலச் சரிவால் நதியின் போக்கில் மலைப் பாம்பு வடிவத்தில் ஏற்பட்ட ஒரு தடையாக இருக்க வேண்டும். வலிமையுள்ள அரசனான இந்திரன், தன் படையுடன் அங்கு சென்று அந்தத் தடையை அகற்றி இருக்க வேண்டும். வ்ருத்ரன் என்ற சொல்லுக்கு சூழ்ந்திருப்பது என்று பொருள். அந்தத் தடை நதியின் நீர் ஓடாதபடி சுற்றிலும் சூழ்ந்து இருந்ததால் அது அப் பெயர் பெற்றிருக்க வேண்டும்.   
            அதே போல, வலன் என்றும் பணி என்றும் பெயரிடப்பட்ட ஒரு நிலச்சரிவால் அங்கிரஸ்களின் மாடுகள் இருந்த இடம் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். மோப்ப நாயின் உதவியால் மறைவுக்குப் பின்புறம் மாடுகள் இருப்பதை அறிந்த அங்கிரஸ்கள் இந்திரனின் துணையால் அந்தத் தடையை வென்று மாடுகளை மீண்டும் பெற்றிருக்க வேண்டும். மண் அகற்றும் திறமை படைத்த ஒரு பெரும் படை இந்திரனிடம் இருந்திருக்க வேண்டும்.
            இந்த ஊகம் ஒரு வகையில் பொருத்தமாக இருந்தாலும், இந்திரனும் அச்வின்களும் தஸ்யுக்களைக் கொன்று ஆர்யர்களுக்கு ஜ்யோதியைக் கொடுத்தார்கள் என்று சொல்லப்படும்போது1 இந்த உருவகம் பொருந்தவில்லை. நிலச்சரிவு ஒளியை எப்படித் தடுக்க முடியும்?
கோத்ரம்
            மூன்றாவது உருவகத்தைப் பார்க்கும் முன் வேத காலத்தில் பசு எப்படிக் கருதப்பட்டது என்பதைப் பார்ப்போம்.
            ரிக் வேதத்தில் சில மந்திரங்கள் எங்களுக்கு நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான பசுக்களைக் கொடு என வேண்டுகின்றன. ஓரிடத்தில் ரிஷி தனக்கு அறுபதினாயிரம் பசுக்கள் தானமாகக் கொடுக்கப்பட்டதைக் கூறுகிறார்.2
            மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்றாலும் அவர் குறைந்தது 60 பசுக்களாவது பெற்றிருக்கக் கூடும். இத்தனை பசுக்களை வைத்துக் கொண்டு அவர் எப்படிப் பராமரித்தார் என்ற கேள்வி எழுகிறது.
            வேதத்தில், பசு மந்தைக்கும் அவை தங்கும் இடத்துக்கும் கோத்ரம் என்பது பெயர். பிற்காலத்தில் இந்தப் பெயர் ஒரு பரம்பரையைக் குறிக்கும் சொல்லாக மாறியது. ஒரு பசு மந்தையின் உடைமையாளர்கள் ஒரு கோத்ரக்காரர்கள். இவர்கள் ஒரே கிராமத்து மக்களாக இருந்ததும், அவர்களுடைய பொது உடமையாக இந்தப் பசுக்கள் கருதப்பட்டிருந்ததும் ஊகித்து அறிய முடிகிறது.
உருவகம் 3 - பொது உடமைப் பொருட்களைத் திருடும் சமூக விரோதி
            நீரையும், ஒளியையும் போல பசுவும் எல்லோருக்கும் பொதுவான பொருளாக இருந்தது. இதன் அடிப்படையில் மூன்றாவது உருவகத்தைப் பார்ப்போம்.
            கிராமத்துக்குப் பொதுவான பசுக்களைப் பராமரிக்க, உழைக்க வலிமையுள்ள சிலர் நியமிக்கப் பட்டிருக்க வேண்டும். வலிமையற்றவர்கள் அவர்களது உழைப்பின் பலனை அனுபவிப்போராக இருந்திருப்பர். ஒவ்வொருவருக்கும் அவரவருக்குத் தேவையான பொருள் கிடைத்தது. ஒவ்வொருவரும் அவரவருக்கு முடிந்த வேலைகளைச் செய்தனர். இது ஒரு சமதர்ம சமுதாயம்.
            பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைக்கும் வரை இந்த சமுதாயத்தில் பிரச்சினை எதுவும் வர வாய்ப்பில்லை. தட்டுப்பாடு ஏற்படும்போது, வலிமையுள்ள சிலர் தனக்கென்று மிக அதிகமான பொருட்களைப் பதுக்கி வைப்பது இயல்பு. பொதுச் சொத்துக்களைத் தன் சொந்த நலனுக்கென்று பயன்படுத்துவோரை நாம் இன்று சமூக விரோதிகள் என்று அழைக்கிறோம்.
            வலன் என்ற பணி பசுக்களைச் சிறைப் பிடித்தான். பணி என்ற சொல்லுக்கு வணிகர் என்பது அடிப்படைப் பொருள். வணிகர் தான் கொடுத்த பொருளின் மதிப்புக்குச் சமமான வேறு பொருளை பெற்றுக் கொள்வதில் குறியாக இருக்கிறார். பொதுச் சொத்தைப் பராமரிப்பவர் தான் செய்வதைச் சேவையாகக் கருதாமல், தன் உழைப்பினால் கிடைத்த உற்பத்திப் பொருட்கள் தனக்கு மட்டுமே சொந்தம் என்று இருந்தால் அவர் பணியாக(சமூக விரோதியாக)க் கருதப்படுவார். அதனால் அவர்களை வேதம் தஸ்யு (பகைவர்) என்று கூறுகிறது
            அக்ரது (செயல் அற்றவர்கள்), அராதி (தானம் செய்யாதவர்கள்), அச்ரத்தா (சிரத்தை இல்லாதவர்கள்), அவ்ருதா (நல்ல காரியங்களை ஊக்குவிக்காதவர்கள்) என்ற அடைமொழிகளிலிருந்து தஸ்யுக்கள் சமூக நலனுக்குப் பாதகமான குணங்களைக் கொண்டவர்கள் என்று கருத இடம் உள்ளது.
            விருத்திரன் சமுதாயத்துக்குச் சொந்தமான நீரை மக்கள் அனுபவிக்காதபடி வளைத்துப் போட்டான். வலன் பொதுச் சொத்தான பசுக்களைத் தன் நலனுக்காகச் சிறைப் பிடித்து வைத்திருந்தான். இந்த சமூக விரோதச் செயல்களைச் செய்யும் பகைவர்களை வழிக்குக் கொண்டு வரும் பொறுப்பு அந்தச் சமுதாயத்தின் தலைவனின் பொறுப்பாகிறது. பகைவர்கள் தங்களைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு செய்து கொள்வது இயல்பே. பலர் உதவியுடன், தடைகளைச் சமாளித்து இவர்களைத் தோற்கடித்தது தான் மலையைப் பிளந்து வலனைக் கொன்று பசுக்களை மீட்டதாகவும், விருத்திரனைக் கொன்று ஆறுகளைப் பெருகச் செய்ததாகவும் கூறப்படுகிறதுதஸ்யுக்களைத் தண்டிக்கும் வகையில் அவர்களை கட்டாயப்படுத்தி அடிமைத்தனத்துக்கு உட்படுத்தும் முறை இருந்திருக்க வேண்டும் என்பது அறியப்படுகிறதுஇதனால் தஸ்யுக்கள் தாஸர்கள் ஆனார்கள்.
            அவர்கள் செல்வம் மிகப் பெற்றிருந்தும் அதைப் பிறருக்குப் பயன்படுமாறு கொடுக்காமல் இருந்தார்கள், இனிமையான பேச்சு இல்லாதவர்கள் என்பதை அறிய முடிகிறது.
            தஸ்யுக்களை அழிக்குமாறு தேவர்களை வேண்டுகிறார்களே தவிர, ஆர்யர்கள் தாங்களே ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. தேவர்களால் தோற்கடிக்கப்பட்ட தஸ்யுக்கள் ஆர்யர்களுக்குத் தாஸர்களாக  வாழத் தொடங்கினர். அந்த அடிமைகள் பிறருக்குத் தானமாகவும் கொடுக்கப்பட்டனர் என்பதை ஒரு ரிஷி தான் 100 தாஸர்களைப் பெற்ற விவரத்தைக் கூறுவதிலிருந்து அறிகிறோம்.3
            அந்த தாஸர்கள் நன்றாக உழைத்தார்கள் என்பது நான் தாஸனைப் போலக் கடுமையாக தேவர்களுக்கு உழைத்தேன் என்பதிலிருந்து தெரிகிறது.4
            சமூக விரோதிகளைத் தற்காலத்தில் காவலர்கள் சிறைப்படுத்தி வேலை செய்ய வைப்பது போல இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. தண்டனையால் மனம் திருந்திய  தாஸர்கள் கொடையாளிகளாக மாறினாலும் தங்கள் பழைய பெயராலேயே அழைக்கப்பட்டார்கள் என்பதை முன் சொன்ன பல்பூதன், தருக்ஷன் பற்றிய குறிப்பிலிருந்து அறிகிறோம்.
            ஆர்யர்களாக இருந்தவர்களில் கூடச் சிலர் காலப்போக்கில் சமூக விரோதிகளாக மாறியிருப்பர். அவர்கள் பழைய பெயரால் ஆர்யர்கள் என்று கூறப்பட்டாலும் எதிரிகளாகக் கருதப்பட்டனர். எங்கள் எதிரிகளைக் கொல்வாயாக, அவர்கள் தாஸர்களானாலும், ஆரியர்களானாலும் என்ற வேண்டுதல் காணப்படுகிறது.5
            பொது உடைமைப் பொருட்களை அபகரிப்பவரே தஸ்யு என்னும் இந்த உருவகப் பொருள் ஜ்யோதியை எந்தத் தஸ்யு அபகரிக்க முடியும் என்பதை விளக்கவில்லை
            இது வரையில் மூன்று வகையான உருவகப் பொருள்களைப் பார்த்தோம்- மேகங்களை அழித்து மழை பொழியச் செய்தல், நிலச் சரிவை அகற்றி நீர் மற்றும் பசுக்களின் பாதையைத் திறந்து விடுதல், பொது உடமைப் பொருட்களை அபகரிக்கும் சமூக விரோதிகளைத் தண்டித்தல். இந்த மூன்றுமே தஸ்யு பற்றிய எல்லாச் செயல்களையும் விளக்கவில்லை. இருப்பினும் இவற்றை முழுமையாகத் தள்ளிவிடவும் முடியாது. ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு உருவகம் பொருத்தமாக இருக்கும். அதை அங்கு ஏற்றுக் கொள்ளலாம்.

குறிப்புகள்
1          1.117.21, 7.5.6                      2          1.126.3
3          8.56.37                                   4          7.86.75          

5          10.38.3

தஸ்யுக்கள்



            ராட்சசரைப் போலவே தேவர்களால் அழிக்கப்படத் தக்க வேறு ஒரு கூட்டம் உண்டு. இவர்கள் தஸ்யு என்று அழைக்கப்படுகிறார்கள். தஸ்யு என்ற சொல் எதிரி எனப் பொருள் படும்.
            யக்ஞம், பிரார்த்தனை, விரதம் இவற்றை அனுசரிக்காமல் இருப்பதில் இவர்கள் ராட்சசர்களைப் போன்றவர்கள் என்றாலும் தஸ்யுக்களுக்கும் ராட்சசர்களுக்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு.
            ராட்சசர்கள் இறை வழிபாட்டைத் தடுக்கும் தீய பண்புகள் என்று அறிந்தோம். ஆனால் தஸ்யுக்கள், மற்றவர்களின் இறை வழிபாட்டிற்கு இடையூறு செய்வது இல்லை.
            ரிக் வேதத்தில் எந்த ராட்சசரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சில தஸ்யுக்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. – நமூசி, துனி, சும்ரி, சுஷ்ணன், சம்பரன், கௌலிதரன், வர்சின், அஹிசுவன், பிப்ரு, அனர்சனி, வ்ருஷசிப்ர. இவர்களை இந்திரன், அச்வினிகள், அக்னி, சோமன், மருத்துகள் ஆகியோர் அழித்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
            ராட்சசர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள், எங்கிருந்தும் வருவார்கள் எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தஸ்யுக்கள் குறிப்பிட்ட இடத்தில், வலுவான நகரங்களில் அல்லது கோட்டைகளில் வசிப்பவர்களாகக் கூறப்படுகிறார்கள். அவர்கள் வசம் 100 கோட்டைகள் இருந்ததும் கூறப்பட்டுள்ளது.
            தஸ்யுக்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக ரிஷிகள் தங்களை ஆர்யர்கள் (உயர்ந்தவர்கள்) என்று கூறிக் கொள்கிறார்கள்.
            தஸ்யுக்களைப் பற்றி ரிக் வேதம் கூறும் விவரங்களைப் பார்ப்போம்.
            1 அநாஸ (மூக்கில்லாதவர்கள்),
            2 க்ரதின், (உளறுபவர்கள்), ம்ருத்ரவாச (தெளிவற்ற பேச்சு உடையவர்கள்),
            3 அயக்ஞா (யக்ஞம் செய்யாதவர்கள்), அன்யவ்ரதர்கள் (வேறு வகையான விரதம் கடைப்பிடிப்பவர்கள்), மாயையால் விண்ணை அடையும் செல்லும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் என்று வர்ணிக்கப்படுகிறார்கள்.1
            4 ஆர்யர்களின் எதிரிகளாகச் சிச்ன தேவர்கள் என்போர் இரு இடங்களில் கூறப்பட்டுள்ளனர்.2 சிச்ன என்பது குறி எனப் பொருள்படும்.
            5 தஸ்யு (எதிரி) என்ற சொல்லும் தாஸர் (அடிமை) என்ற சொல்லும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
            மேலே கண்ட குறிப்புகளைக் கொண்டு மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் முடிவு கட்டியது பின் வருமாறு.
            ஆர்யர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபோது வட இந்தியாவில் வசித்தவர்கள் தஸ்யுக்கள்.
            1 நீண்ட மூக்கு உடைய ஆர்யர்களைப் போல அல்லாமல் இவர்கள் சப்பை மூக்கு உடையவர்களாக இருந்ததால் அநாஸ எனப்பட்டார்கள்.
            2 ஆர்யர்களுக்குப் புரியாத வேறு மொழி பேசியதால் உளறுபவர்கள், தெளிவற்ற பேச்சு உடையவர்கள் என வர்ணிக்கப்பட்டனர்.
            3 யக்ஞம் அல்லாத வேறு வகையான வழிபாட்டு முறை உடையவர்கள்.
            4 சிச்னத்தை (சிவலிங்கத்தை) வழிபட்டவர்கள்.
            5 இரு இனத்தாருக்கும் இடையே தொடர்ந்து போர் நடைபெற்றது. போரில் தோற்றவர்களை அடிமைப்படுத்தினார்கள் ஆர்யர்கள். இறுதியில் திராவிடர்கள் தோற்று வட இந்தியாவை விட்டே விலகித் தென்னிந்தியாவில் குடியேறினார்கள். அவர்கள் திராவிடர்கள்.
            6 தாஸர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த தண்ணீரை ஆர்யர்களுக்காக இந்திரன் விடுவித்தான்3 என்பதிலிருந்து நீர் வரும் பாதையில் மேல் மட்டத்தில் உள்ள அண்டை நாட்டுக்காரர்களாக இருக்கலாம் என்றும் அவர்களுக்கிடையே நதி நீர்ப் பங்கீடு பற்றிய தகராறு (தற்போதைய தமிழ்நாடு கர்நாடகக் காவிரி நீர்ப் பிரச்சினை போலஇருந்திருக்கலாம் என்றும் சந்தேகம் வருகிறது.
            மேலை நாட்டவர் கண்ணில் படாத அல்லது அவர்கள் சொல்ல விரும்பாத விஷயங்கள் வேதத்திலும் உண்டு, நமது பொது அறிவிலும் உண்டு.
            1 தஸ்யுக்களாகக் கருதப்படும் தென்னாட்டவர்களுக்கும், ஆர்யர்களாகக் கருதப்படும் வடநாட்டவர்களுக்கும் மூக்கு விஷயத்தில் வேறுபாடு இல்லை. எப்படிப் பார்த்தாலும் மூக்கில்லாதவர்கள், சப்பை மூக்கு உடையவர்கள் என்ற சொல்லுக்குத் தென்னாட்டவர் உரியவர்கள் அல்லர் என்று அரவிந்த கோஷ் கூறுகிறார்.
            2 ஆர்யர்களும் தாஸர்களும் வேறு வேறு மொழி பேசுபவராக இருந்திருந்தால் கூட பல காலம் சேர்ந்து ஒரே சமூகமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதால் ஒருவர் மற்றவர் மொழியைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களாக இருந்திருப்பார்கள்.
            3 வேதமே பல வகையான வழிபாட்டு முறைகளை ஏற்றுக் கொண்டிருப்பதை யக்ஞம் என்ற தலைப்பில் காணப் போகிறோம். எனவே வழிபாட்டுமுறை மாறுபட்டிருப்பதன் காரணமாகப் பகைமை ஏற்பட்டிருக்காது. மேலும், எந்தத் தேவருடைய வழிபாடும் இல்லாத இடத்திலும் அச்வின்களின் வழிபாடு நடைபெறுகிறது4 என்பதிலிருந்தும், தாஸர்கள் தந்த உணவை அச்வின்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்5 என்பதனாலும் வழிபாட்டு முறையில் தாஸர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள் அல்லர்  என்பது தெரிகிறது.
            4 ஆரிய திராவிடப் பிரச்சினைகள் தோன்றாத காலத்தில் எழுதப்பட்ட சாயணர் உரையில் சிச்ன தேவர் என்பதற்கு லிங்க வழிபாடு செய்பவர் என்ற பொருள் காணப்படவில்லை. மாறாக, புலன் நுகர்ச்சியில் அளவு கடந்த நாட்டம் உடையவர் என்றே காணப்படுகிறது. சிச்னத்தைச் சிவலிங்கமாகக் கருதியது ஆங்கிலேயரின் விஷமத்தனமான வேலையே.
            5 ஆர்யர்களும் தஸ்யுக்களும் நிரந்தரப் பகைவர்கள் அல்லர். ஒரு மந்திரத்தில்6 வச அச்வ்ய என்ற ரிஷி, தான் பல்பூத बल्बूथ மற்றும் தருக்ஷ என்ற தாஸர்களிடமிருந்து 100 பசுக்களைப் பரிசாகப் பெற்றதைக் கூறுகிறார். செல்வந்தனான ருசம பவிரு என்பவரிடத்தில் ஆர்யர்களும் தாஸர்களும் தானம் பெறக் குழுமினர் என மற்றொரு மந்திரம்7 கூறுகிறது. இதிலிருந்து ஆர்யர்களும் தாஸர்களும் ஒரே சமூகத்தில் ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள் தான் என்பது உறுதியாகிறது.
            6 வேதம் இயற்றப்பட்ட இடமாகக் கருதப்படும் சிந்து கங்கைச் சமவெளியில் மழைக்கோ ஆற்று நீருக்கோ பஞ்சம் இல்லை. எனவே அணை கட்டித் தண்ணீரைத் தேக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் அடுத்தவருக்குத் தண்ணீர் போகாமல் தடுக்கக் கூடிய அணை கட்டும் தொழில் நுட்பமும் அவர்களிடத்தில் இருந்ததற்கு ஆதாரம் இல்லை. எனவே ஆப: (தண்ணீர்) என்ற சொல் வேறு பொருளைக் குறிப்பதாக இருக்க வேண்டும்.
            மேலும், பிரார்த்தனைகள் மூலம் மலைகளைப் பிளந்து பகைவரால் மறைத்து வைக்கப்பட்ட பசுக்களை மீட்டனர்  என்றும், தர்மத்தை மனதில் கொண்டு பகைவனைக் கொன்றார்கள் என்றும் கூறப்படுவதால் தஸ்யு என்பது ஒரு உண்மையான பகைவனைக் குறிப்பிடாமல், வேறு ஒரு மறை பொருளைக் குறிப்பிடுவதை அறிகிறோம்.          

குறிப்புகள்
1          8.14.14                       2          7.21.5, 10.99.3
3          5.30.5                         4          8.10.4
5          8.5.31                         6          8.46.32

7          8.51.9

ராட்சசர்கள்



            மாயையாவது யாதெனில் ஸர்வ மங்களமாகிய ஜகத்தில் ஜீவன் தன் கற்பனா சக்தியால் ஏற்படுத்திக் கொள்ளும் தீமை..... இந்த மாயை என்ற ராக்ஷஸியின் வயிற்றில் கவலை, துன்பம், பயம், கஷ்டம், மரணம் முதலிய அஸுர ஜாதிகள் தோன்றி ஜீவகுலம் என்ற பயிரை அழிக்கின்றன.- பாரதி
            இன்றைய வழக்கில் அசுரர்களும் ராட்சசர்களும் ஒன்று. பாரதியும் அப்படித்தான் பயன்படுத்துகிறார். ஆனால் வேதம் அவ்வாறு கூறவில்லை, வலிமை உடைய எல்லாரும், தேவர்கள் உள்பட, அசுரர்கள் தான் என்று பார்த்தோம். தேவர்களின் பகைவர்கள் ராட்சசர்கள் என்றும் பார்த்தோம்.
            (ரிக் வேதத்தில் ராக்ஷஸ் என்ற சொல் காணப்படவில்லை. ரக்ஷஸ் என்று தான் இருக்கிறது. தமிழ் வழக்கை ஒட்டி இங்கு ராட்சசர் என்று எழுதப்படுகிறது.)
            ராட்சசர்கள் என்பார் ஒரு தனி இனத்தவர் அல்ல. ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேர்ந்து வாழும் ஒரு கூட்டத்தினர் அல்ல. அவர்கள் எங்கே வசிப்பவர்கள் என்று சொல்ல முடியாது. பூமி முழுவதும் அவர்கள் வியாபித்து இருப்பதாகக் கொள்ளலாம். அவர்கள் எத்திசையிலிருந்தும் வரலாம், எந்த நேரத்திலும் வரலாம், அருகிலிருந்தும் வரலாம், தொலைவிலிருந்தும் வரலாம்.1 அவர்கள் நம்மிடையே கூட இருக்கலாம். ஆம், ஒரு மந்திரம்2 மனிதர்களுக்கிடையில் உள்ள ராட்சசர்களைக் கண்டுபிடியுங்கள் என்று அக்னியை வேண்டுகிறது. ராட்சசர்களில் பெண்களும் உண்டு.
            ராட்சசர்கள் எப்படிப்பட்டவர்கள்? யாகங்களுக்கும், ஹவிர்பாகங்களுக்கும், இடையூறு செய்பவர்கள்3, பிரார்த்தனையை வெறுப்பவர்கள். மூடர்களைக் கடவுளாக வணங்குவார்கள்.4
            அவர்கள் இருட்டை வளர்ப்பவர்கள்,5  அறிவில்லாதவர்கள், தவறான அறிவு பெற்றவர்கள் என்றும் சூரிய உதயம், வைகறைப் பொழுதின் வருகை ஆகிய ஒளிகளால் அவர்கள் விரட்டப்படுவதாகவும்6 கூறப்பட்டுள்ளதால் இந்த இருட்டு என்பது அஞ்ஞானத்தைக் குறிப்பது அறியப்படுகிறது. அஞ்ஞானத்தின் விளைவான துயரத்தை வளர்க்கும் அவர்களை ஆனந்தத்தின் பிரதிநிதியான சோம பானம் நசுக்கும் பாறைக் கற்களின் ஓசை விரட்டுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
            அவர்கள் பிறருக்கு எதுவும் கொடுக்க மாட்டார்கள். மக்களைத் துன்புறுத்துவார்கள். அவர்கள் அத்ரின் (விழுங்குபவர்)7 என்றும் க்ரவ்யாத (மாமிசம் சாப்பிடுபவர்) என்றும் கூறப்படுவதிலிருந்து அவர்கள் உணவையே பெரிதாக நினைப்பவர்கள் என்றும் அதில் எந்தக் கட்டுப்பாடும் ஏற்காதவர்கள் என்றும் அறிகிறோம். பிறரை நிந்திப்பார்கள். திட்டுவார்கள். பொய்யான குற்றச் சாட்டுகளைக் கூறுவார்கள். இரண்டு வகையாகப் பேசுவார்கள்.8
            அவர்கள் வலிமை மிக்கவர்கள். வலிமையில் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அதைக் கொண்டு அவர்கள் மனிதரை அடக்கி ஆள்கிறார்கள். செல்வத்தைப் பறித்துக் கொள்கிறார்கள். மாயையில் வல்ல அவர்கள் தவறு செய்து விட்டு இரவோடு இரவாகப் பறவை போல் பறந்து விடுகிறார்கள்.9
            நோய், பிசாசு, பாம்பு, ஓநாய் போல அஞ்சத்தக்க10 அவர்களை நாயைக் கல்லால் அடித்து விரட்டுவது போல விரட்ட வேண்டும் என்கிறது வேதம்.11 அவர்கள் பாதை துன்பம் நிறைந்ததாக ஆக வேண்டும். அவர்கள் தங்கள் கெட்ட செயல்களின் விளைவைத் தாங்களே அனுபவிக்க வேண்டும்12, அவர்களும் பொய் சொல்லுபவர்களும் இந்திரனின் வலைக்குள் அகப்பட வேண்டும்13 ராட்சசரால் வெல்ல முடியாத வலிமையும்14, அவர்களால் பறித்துக் கொள்ளப்பட முடியாத செல்வமும் எங்களுக்கு வேண்டும் என்று வேதம் வேண்டுகிறது.15
            இந்த வருணனைகளைப் பார்க்கும்போது, ராட்சசர் என்பது ஒரு இனப் பெயர் போலத் தோற்றம் அளித்தாலும்  அஞ்ஞானம், பொய், கோபம், பிறரைக் குறை கூறுதல், பொறாமை, பேராசை முதலிய தீய குணங்களைக் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களே ராட்சசர் என உருவகப் படுத்தப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
            எல்லார் மனதிலும் ராட்சசத் தனம் இருக்க வாய்ப்பு உண்டு. ராட்சசத் தனம் இல்லாத மனத்தோடு என் பிரார்த்தனையைக் கேட்பாயாக என்று அக்னி வேண்டப்படுவதிலிருந்து16 ராட்சசர்களின் இருப்பிடம் மனம் தான் என்று தெரிகிறது.
            எல்லாத் தேவர்களும் ராட்சசர்களை அழிக்க வல்லவர் என்றாலும் குறிப்பாக, இந்திரன், அக்னி, மருத்துகள், சோமன், பிருகஸ்பதி, பர்ஜன்ய, அச்வின்கள் ஆகியோர் ராட்சசர்களை எரித்து அழிக்குமாறு வேண்டப்படுகிறார்கள். மித்ர வருணர்களின் அருளால் மனிதன் ராட்சசரை ஒழிக்கும் வலிமை பெறுகிறான். வசிஷ்டரின் சூக்தம் ஒன்றின் முடிவில்17 அவர் ராட்சசரை ஒழிக்கும் பிரார்த்தனை ஒன்று நான் இயற்றியிருக்கிறேன் என்கிறார்.

குறிப்புகள்
1                      7.104.19                     2                      10.87.10
3                      7.104.21                     4                      10.87.14
5                      7.104.1                       6                      7.104.23
7                      7.104.1                       8                      9.104.6
9                      7.104.18                     10                    7.38.7
11                    7.104.22                     12                    8.18.13
13                    7.104.13                     14                    8.22.18
15                    8.101.8                       16                    2.10.5 

17                    7.8.6