Popular Posts

Wednesday, June 25, 2014

மரணத்திலிருந்து அம்ருதத்தை நோக்கி


 
சாதாரண மனிதனாக இருப்பவன் வேள்வி செய்யும் நரன் ஆக உயர்கிறான். மேலும் உயர்ந்து பிரார்த்தனைப் பாடல் இயற்றும் ரிஷி ஆகிறான். அடுத்த நிலையில் தன் அருட்செல்வத்தைப் பிறருக்கு வாரி வழங்கும் மகோனன் ஆகிறான். கடைசியாக சூரி எனப்படும் நிலையை அடைந்து மக்களுக்கு வழிகாட்டுகிறான். இதற்கு அடுத்த நிலையில் அவன் தேவன் ஆகிறான். இவ்வாறு படிப்படியாக உயர்ந்து மனிதன் தேவன் ஆகிறான்.  
வேதத்தில் ஐந்து வகை மனிதர் என்று பொருள்படும் பஞ்சஜநா:, பஞ்சக்ஷிதய:, பஞ்சக்ருஷ்டய: என்ற சொற்கள் அடிக்கடி காணப்படுகின்றன. (पञ्चजनाः, पञ्चकृष्टयः, पञ्चक्षितयः). இவை பிராமண க்ஷத்ரிய வைசிய சூத்ர சண்டாளர்களைக் குறிக்கும் என்று சாயணர் கூறுகிறார். இது ஏற்கக் கூடியதல்ல. ஏனெனில், ரிக் வேதத்தில் நான்கு வர்ணங்களைப் பற்றிய குறிப்பு ஒரே ஒரு இடத்தில் பத்தாவது மண்டலத்தில் புருஷ சூக்தத்தில் ஆதி புருஷன் யாகம் செய்வதை வர்ணிக்கும் இடத்தில் விராட் புருஷனின் முகத்திலிருந்து பிராமணன் தோன்றியது முதலான விவரம் வருகிறது. ரிக் வேதம் முழுவதும் வேறு எங்கும் இது பற்றிய மேல் விவரம் கிடைக்கவில்லை. பத்தாவது மண்டலம் காலத்தால் பிற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வர்ண முறை ஏற்பட்ட பிறகு இயற்றப்பட்டு இடைச்செருகலாகப் புகுத்தப்பட்ட பகுதி இது. அதனால் இதை ரிக் வேதத்தின் ஆதாரக் கருத்தாகக் கொள்வதற்கில்லை.
இதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு, மேலும் ஒரு சான்று தரப்படுகிறது. சாயணர் குறிப்பிடும் சண்டாளர் என்ற சொல் ரிக் வேதம் முழுவதும் இல்லவே இல்லை.
ராட்சசர்/ தஸ்யு என்று ரிக் வேதத்தில் கூறப்பட்டவர்களே பிற்காலத்தில் சண்டாளர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சிலர் சொல்லக் கூடும். இதுவும் தவறு. ஏனெனில் ரிக் வேதம் ஐவகை மனிதர்களும் நன்றாக வாழ வேண்டுமென்று எல்லா இடங்களிலும் பிரார்த்திக்கிறது. ராட்சசர்களையும் தஸ்யுக்களையும் அழிக்க வேண்டுமென்று கூறுகிறது. ஆக ராட்சசர்கள்/ தஸ்யுக்கள் இந்த ஐவகை மனிதர்களில் அடங்கியவர்கள் அல்லர்.    
ப்ரம்ம என்ற சொல் எல்லா இடங்களிலும் மந்திரம் என்ற சொல்லில் தான் வருகிறது. ப்ராம்மண என்ற சொல்லும் மந்திரம் சொல்பவர் என்ற பொருளில் தான் வருகிறது.  க்ஷத்ர என்ற சொல் வீரம் என்ற பொருளில் வருகிறதே தவிர க்ஷத்ரிய ஜாதி அல்லது வர்ணம் என்ற கருத்தைக் காண முடியவில்லை. அரசரைக் குறிக்க ராஜன்ய என்று தான் கூறப்படுகிறது. வைசிய சூத்ரர்களைப் பற்றிய குறிப்பு இல்லவே இல்லை.
ரிக் வேதம் முழுவதும் ஆழ்ந்து கற்கும்போது ஆங்காங்கு கிடைக்கின்ற குறிப்புகளைத் தொகுத்துப் பார்த்ததில், மனிதன் தேவ நிலையை அடையும் வழியில் உள்ள படி நிலைகளே இந்த ஐவகை மனிதர் என்று கருத இடம் உள்ளது. அவர்கள் 1 மர்த்யர், 2 நரர், 3 ரிஷி, 4 மகோனர், 5 ஸூரி.
அந்த ஐவகை மனிதர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
1 மர்த்யர்கள்
இதன் நேர்ப் பொருள் இறக்கக் கூடியவர் என்பது. எல்லா மனிதரும் சாகத்தானே போகிறார்கள். இதற்கு ஏன் சில மனிதரை மட்டும் சாகக் கூடியவர் என்று கூற வேண்டும்?
இவர்கள் வாழ்க்கையின் உயரிய விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. இவர்கள் ராட்சசர்களைப் போல நாத்திகரோ, யக்ஞங்களுக்கு இடையூறு செய்பவரோ அல்லர். இவர்கள் கடவுளை வணங்குகிறார்கள், யாகமும் செய்கிறார்கள்.
யக்ஞம் என்பது மேலோரைப் போற்றலும், கீழோரைக் காத்தலும் ஆகும் என்பதை வரவிருக்கும் தலைப்பு ஒன்றில்  விரிவாகப் பார்க்க இருக்கிறோம். மர்த்யர்கள் யக்ஞம் என்பதன் முழுப் பொருளையும் உணராமல் (மேலோரைப் போற்றுவதையும் கீழோரைக் காப்பதையும் செய்யமல்) தன் சொந்த நலனுக்காக மட்டும் வேள்வி செய்பவர்களாக இருந்திருக்கக் கூடும்.  
உண்பதிலும், உணவிற்காக உழைப்பதிலும், சின்னஞ் சிறு இன்பங்களை அனுபவிப்பதிலும், பிறருக்குத் துன்பம் தருவதிலும்1, போரிடுவதிலும்2 அவர்களது வாழ்க்கை கழிந்து விடுகிறது. வாழ்ந்ததற்கான எந்த அடையாளமும் இன்றி ஒரு நாள் இறந்து போகிறார்கள். இவர்கள் இறப்பதற்கே பிறந்தவர்கள். அதனால் மர்த்யர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
            இவர்கள் பாரதியாரின் பின் வரும் பாடலில் குறிப்பிடப்படும் வேடிக்கை மனிதன் போலவே இருக்கிறார்கள்.
தேடிச் சோறு நிதம் தின்று பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர் 
வாடப் பலசெயல்கள் செய்து நரை 
கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல
வேடிக்கை மனிதர் ……………….

 2 நரர்
நரர் என்ற சொல்லுக்குத் தலைவர் என்றும் மனிதர்  என்றும் பொருள். மர்த்யர்களை விட மேம்பட்ட இவர்கள் விழிப்புப் பெற்ற மனிதர்கள். மிருகங்களைப் போல, புழு பூச்சிகளைப் போல, சாவதற்கென்று பிறந்தவர்கள் அல்ல நாம் என்று உணர்ந்தவர்கள். இவர்கள் தேவ நிலையை அடைவதற்கு முதல் அடி எடுத்து வைத்தவர்கள். இந்தப் படியைக் கடந்து தான் ஒருவன் மேல் நிலைக்குப் போக முடியும்.
            இந்த நரர்கள் விழிப்புப் பெற்றார்களே அன்றி என்ன செய்தால் தேவ நிலையை அடையலாம் என்று அறியாதவர்கள். அதனால் தமக்கு மேல் நிலையில் உள்ள ரிஷிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். அவர்கள் சொன்னபடி யக்ஞம், பிரார்த்தனை, சோமம் வடித்தல் முதலானவை செய்கிறார்கள். இவர்களுக்கு காரு, வஹ்னி, வாகத, ஸபாத, ஆயு என்ற வேறு பெயர்களும் உண்டு.
3 ரிஷி
இவர்கள் யாகம் செய்யும் நிலையிலிருந்து மேலே உயர்ந்தவர்கள். இவர்கள் தேவர்களைக் குறித்த பிரார்த்தனைப் பாடல்களை அறிந்தவர்கள். முன்னோர்களின் பாடல்கள் மட்டுமன்றி, புதிய பாடல்களையும் இயற்றுவார்கள். இவர்களுக்கு விப்ர, விப, கவி, வித்வான் என்ற வேறு பெயர்களும் உண்டு. “வஹ்னிகள் ருதத்தின் மகனை (அக்னியை) (ஹவிஸ் முதலான) காணிக்கைகளால் நிரப்பும்போது, விப்ரர்கள் ருதத்தைப் பிரார்த்தனைகளால் நிரப்புகிறார்கள்3 என்பதிலிருந்து விப்ரர் எனப்பட்ட ரிஷிகள், வஹ்னி என்ற நரர் போல் வேள்வி செய்வதில்லை என்றும் அவர்கள் தோத்திரங்களைப் பாடி தேவர்களைத் துதிக்கிறார்கள் என்றும் அறிகிறோம். வேத மந்திரம் முழுவதும் இத்தகைய ரிஷிகள் இயற்றியவை தாம். தன்னை விடக் கீழ் நிலையில் உள்ள மர்த்யர், நரர் ஆகியோருக்காகவும், மேல் நிலையில் உள்ள மகோனர், சூரி ஆகியோருக்காகவும் சேர்த்து இவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
4 மகோனர்
            இந்தச் சொல்லுக்கு செல்வம் மிக்கவர்கள் என்று பொருள். இவர்கள் அதை மற்றவர்களுக்கு வாரி வழங்குகிறார்கள். அந்தச் செல்வம் எத்தகையது என்பதை பின்னால் வரும் ஒரு பகுதியில் காணலாம். ஓரிடத்தில் மட்டும் இந்திரா, பிறருக்குக் கொடுக்காத மகோனரால் உனக்குத் துன்பம் நேராதிருப்பதாக4 என்று வருகிறது. எனவே, வாரி வழங்காத மகோனரும் அபூர்வமாக ஓரிருவர் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
            இவர்கள் ரிஷியாக இருந்து உயர்ந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் தனக்காகப் பிரார்த்தனை செய்வதில்லை. ஓரிரு இடங்களில் “மகோனராகிய எங்களுக்கு செல்வம் அருள்க” என்று பொருள் கொள்ளக் கூடிய மந்திரங்கள் உள்ளன. மற்ற இடங்களில், பிரார்த்தனை செய்யும் ரிஷிகள்,எங்களுக்கும் எங்கள் மகோனர்களுக்கும் உணவு, இருப்பிடம், மக்கட் பேறு, செல்வம், புகழ், பாதுகாப்பு, எதிரிகளை வெல்ல வலிமை முதலானவை கிடைக்க வேண்டுமென்று” தேவர்களை வேண்டுகிறார்கள். இவர்கள் ரிஷிகளால் மரியாதையுடன் குறிப்பிடப்படுகிறார்கள்.
மகோனர்களைப் பற்றிய ஒரு மந்திரத்தில், இவர்கள் பல விதமான எண்ணங்களை உடையவர்கள். வாயிலே எப்பொழுதும் துதிகளைக் காக்கிறார்கள். ஒளியின் முன்னே தர்ப்பைகளைப் பரத்துகிறார்கள். தானே புகழ் அணிந்து கொள்கிறார்கள். மக்களுக்கு நிறைய தானம் செய்கிறார்கள். இவர்களுடைய தேர் தடைபடாமல் செல்லட்டும் என்று ரிஷி வேண்டுகிறார்.5
5 ஸூரி
             இவர்கள் தன்னைப் பற்றிய எந்தச் சிந்தனையும் இல்லாதவர்கள். தன்னிடமுள்ள செல்வத்தை மக்களுக்கு வாரி வழங்குபவர்கள். முற்றிலும் இறைவனைப் பற்றிய சிந்தனையில் மூழ்கியவர்கள்.   இவர்களுக்கு செல்வம், உணவு மிகுதியாகக் கிடைக்க வேண்டும் என்று ரிஷிகள் தான் வேண்ட வேண்டியிருக்கிறது. இவர்கள் தேவ நிலையை அடைவதற்கு முந்திய படியில் உள்ளவர்கள். இரண்டாவது (தேவப்) பிறப்புக்கு ஆசைப்படும் சூரிக்கு அக்னி மகிழ்ச்சி அளிப்பதாக வேதம் கூறுகிறது.6 இவர்களும் மரியாதையுடன் குறிப்பிடப்படுகிறார்கள். பிரார்த்தனை செய்வோருக்கு செல்வத்தையும் புகழையும் கொடு,  சூரிகளுக்கு வஸுத்வனத்தையும் அம்ருதத்தையும் கொடு என்று ரிஷி வேண்டுகிறார்.7 இதிலிருந்து சூரி நிலைக்கு அடுத்த நிலை வஸு என்ற தேவநிலை என்று தெரிகிறது.
            இவர்கள் யக்ஞம் செய்வதாகக் கூறப்படவில்லை. ஆனால் யக்ஞத்தைத் தோற்றுவித்ததாகக் கூறப்படுகிறார்கள்.8 இவர்கள் யந்தார (வழிகாட்டிகள்) என்று கூறப்படுவதால், இவர்கள் மற்ற மக்களுக்கு தேவர்களின் அருளைப் பெறுவதற்கான வழியாக வேள்வி முறையைச் சொல்லிக் கொடுத்திருக்கக் கூடும் என அறிகிறோம். தேவர்கள் தங்கள் எதிரிகளிடமிருந்து அபகரித்த செல்வத்தை இவர்களுக்கு வழங்குகிறார்கள். அதை இவர்கள் மற்றவர்களுக்கு வாரி வழங்குகிறார்கள். பிறருக்குக் கொடுக்காத சூரி எவரும் இல்லை.
            இவர்கள் மகோனர்களை விட மேல் நிலையில் உள்ளவர்கள் என்பது எதனால் தெரிகிறது என்றால் எல்லா மந்திரங்களிலும் எங்கள் சூரிகளுக்கு செல்வம், புகழ், நீண்ட ஆயுள், நல்ல இருப்பிடம், மக்கட்பேறு, துன்பம் இல்லாத வாழ்வு முதலியவை கிடைக்க வேண்டுமென்று ரிஷிகள் வேண்டுகிறார்கள். சூரிகள் தங்களுக்காக எதையும் வேண்டுவதாக எந்த மந்திரமும் கூறவில்லை.
ருதத்தின் (தர்மத்தின்) படி நடந்து இவர்கள் மற்ற மக்களையும் நன்னெறிப் படுத்தும் வேலை இவர்களுக்கு மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது.      
மனிதன் எப்படி தேவ நிலையை அடைகிறான் என்பதை ஒரு மந்திரம் விளக்குகிறது. ருதத்தைத் (தர்மத்தைத்) தாங்கிக் கொண்டு அதைப் போற்றுவதையே செல்வமாகக் கருதி, பல இடங்களிலும் தேடிக் கொண்டு, வேறு எதிலும் ஆசை வைக்காமல், தங்கள் வேலையைச் செய்துகொண்டு, தேவர்களை மகிழ்வித்துக் கொண்டு, தேவப் பிறப்பை நோக்கிச் செல்கிறார்கள். 9
மர்த்யனாக இருப்பவன் இப்படி படிப்படியாக உயர்ந்து தேவ நிலையை அடையலாம். அப்பொழுது அவனுடைய உடல் மடிந்தாலும் அவனுடைய புகழ் மறையாது. அவன் தேவர்களோடு தேவர்களாகச் சேர்ந்து விடுவான். விண்ணில் ஒளியுள்ள உடல் பெற்று அமரனாக வாழ்ந்து கொண்டிருப்பான்.       
இந்த ஐந்தில் நரர், கவி, மகோனர், சூரி ஆகிய அடைமொழிகள் இந்திரன், மருத்துகள், அக்னி, அச்வின்கள், வருணன், சோமன், ரிபுக்கள் ஆகிய எல்லாத் தேவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தேவர்கள் எல்லாரும் இந்த நிலைகளைக் கடந்து வந்தவர்கள் என்பது தெரிகிறது. 

குறிப்புகள்
1          1.27.3
2          1.27.7
3          8.6.2                
4.         6.44.12
5          5.18.3-5
6          1.31.7
7          8.13.12
8          10.66.2
9          1.71.3

மனிதன் சாகாமலிருக்கலாம்



 “சாகாதிருத்தல், மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல், இதுவே கீதையின் ரஸம். அமரத்தன்மை. இஃதே வேத ரகஸ்யம். இந்த வழியைக் காட்டுவது பற்றியே வேதங்கள் இத்தனை மதிக்கப்படுகின்றன. - பாரதி
பிறந்தவர்கள் சாகாமல் இருக்க முடியுமா? நாம் அறிந்தவரை அது சாத்தியம் இல்லை. சில சித்தர்கள் அவ்வாறு வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. கண்டவர் இல்லை. நான் சாகாதிருப்பேன் காணீர் என்று மார் தட்டிய பாரதிச் சித்தரும் செத்துத் தான் போனார். 
மனிதனுக்குத் தான் சாகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருக்கிறது. சாகாமல் இருப்பது சாத்தியம் இல்லை என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட பின்னும் சாகா நிலையை வேறு வகையில் அடைய முடியுமா என்று ஆராய்ச்சி செய்ததன் விளைவு தான் வேதத்தில் காணப்படும் அமரத்வம் பற்றிய சிந்தனை. தானம் செய்வதும் ஹோமம் செய்வதும் அம்ருதத்தைக் குறித்தே.1
அமரத்துவம் என்பதை எந்தப் பொருளில் வேதம் பயன்படுத்துகிறது என்பதை அறிய மீண்டும் ஆழ்ந்து நோக்குவோம்.
மரணமும் அமரத்துவமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. அவை இரண்டும் சகோதரர்கள், ஒரே மரத்தில் அமர்ந்துள்ள இரு பறவைகள் என்பது வேத ரிஷிகளது கருத்து.2 இதனால் தான் நூறாண்டு வாழ்வையும் அமரத்துவத்தையும் வேண்டி இரு விதமான பிரார்த்தனைகள் வேதத்தில் காணப்படுகின்றன.     
ருத்ரன் நமக்குப் பல மூலிகைகளைத் தந்துள்ளார். அவற்றால் நோய்களை உடலிலிருந்து நீக்குவோம். பாவ நினைப்புகளை மனதிலிருந்து நீக்குவோம். சுற்றத்தாரிடம் பகைமை கொள்ளாதிருப்போம். நோயின்றி நூறாண்டு வாழ்ந்து பயனுள்ள வேலைகளில் ஈடுபடுவோமாக.3
            வருணா, எங்களுக்கு மழையையும் அமரத்துவத்தையும் தருக.4
            வேதத்தைப் பெரிதும் மதித்த பாரதியும், விநாயகர் நான்மணி மாலை என்ற நூலில், ஒரு பாடலில் நோவு வேண்டேன் நூறாண்டு வேண்டினேன் என்றும், மற்றொரு பாடலில், நோவும் சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம் இன்புற்று வாழ்க என்றும் வேண்டுகிறார்.
            அவர்கள் நூறாண்டு வேண்டியது உடலுக்கு. அவர்கள் கூறும் அம்ருதம், அமரத்துவம் அல்லது சாகா நிலை என்பது உடல் அழியாமல் வாழ்வது அல்ல. அது உடல் கடந்தது; பாரதி கூறும் அமரத் தன்மையும், மதுரை வீரன் போன்றோர் நாட்டார் தெய்வங்களாக ஆனதும் உடல் அழிவின்மையைக் குறிப்பிடாமல் புகழுடம்பு பெறுவதையே குறிப்பிடுகின்றன.
            வேதம் மூன்று வகையான அமரத்வங்களைப் பற்றிப் பேசுகிறது. முதலாவது சந்ததி மூலம் அடையப்படும் அமரத்வம்.
            அக்னியே, வம்சத் தொடர் அறுந்து போகாமல் எனக்கு அமரத்துவம் தருக.5
            ஆத்மா வை புத்ர நாமா அஸி என்று சதபத பிராமணமும்6 கூறுகிறது. ஒருவன் தானே தனக்கு மகனாகப் பிறக்கிறான் என்பது பொருள். அதாவது மகன் பிறந்தால், தந்தை புத்துயிர் பெற்று வாழ்வதாகக் கருதப்படுகிறது. இதனால் அமரத்வம் என்பது சந்ததி அறுபடாமல் இருப்பதைக் குறிப்பது புலப்படுகிறது. ஒரு குழந்தையினிடத்தில் அதன் பெற்றோர்களின் குணங்கள் மட்டுமல்ல, அவர்களது மூதாதையர்களின் குணங்களும் திறமைகளும் அடங்கியிருக்கின்றன என்பதால் இக்கருத்து தோன்றியது. மகன், பேரன், கொள்ளுப் பேரன் என்று சந்ததி நீடிக்க நீடிக்க அவன் தொடர்ந்து வாழ்வதாக, அமரத்துவம் அடைவதாகக் கருதப்படுகிறது.
இது அனேகமாக எல்லோருக்கும் கிடைக்கும் வாய்ப்பு. இத்தகைய அமரத்துவத்தில் சிறப்பு ஒன்றும் இல்லை. ஏனெனில், அந்த மனிதன் இறந்த பிறகு சில காலம் அவனது சந்ததியினர் அவனை நினைத்துக் கொண்டிருப்பர், வழிபாடு செய்வர். ஆனால் இது எல்லாராலும் வணங்கப்படும் தேவ நிலையைத் தருவதில்லை.
இரண்டாவது வகை அமரத்வம் சோம பானம் மூலம் அடையப்படுவது.
நாங்கள் சோமனைக் குடித்து அமரத்துவம் அடைந்து விட்டோம், எங்களை எதிரிகள் என்ன செய்ய முடியும்? 7
            சோமக் கொடியின் சாறு சோம பானம் எனப்படுகிறது. (இதுபற்றி விரிவாகப் பின்னர் பார்க்கப் போகிறோம்.) இது மனதை விசாலப்படுத்தும் தன்மை உடையது. மனதில் அச்சம், கவலை, கோபம், பொய்மை, ஆசை இவை எதுவும் இல்லாத அமைதியான, ஆனந்தமான மனநிலையைத் தரக்கூடியது. இந்த ஆனந்தம் அனுபவிப்பவருக்கு காலம் என்னும் உணர்வு அற்றுப் போவதால் இது ஒரு வகையான அமரத்துவமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையை சோம பானம் இல்லாமல் யோகப் பயிற்சியின் மூலமும் அடைய முடியும். பானத்தின் அல்லது யோகத்தின் விளைவு குறிப்பிட்ட காலத்திற்குத் தான் இருக்கும். இந்த நிலையை அடைந்தவர் தன் அளவில் ஆனந்தமாக இருப்பர். மற்றவர்க்கு இதனால் பயன் இல்லை. எனவே இவர்களது அமரத்வம் வணக்கத்துக்குரிய தேவ நிலையைத் தருவதில்லை.
            இனி மூன்றாவது வகையான புகழ் மூலம் அடைப்படும் அமரத்வம்.
அவர்கள் புகழ் என்னும் உடையணிந்து அமரத்துவம் அடைகின்றனர்.8 
            வணங்கப்படும் தேவ நிலைக்கு உயர்த்தும் அமரத்வம் என்பது புகழால் மட்டுமே ஏற்படும். புகழ் எப்பொழுது வரும்? செயற்கரிய செய்தால் தான் வரும். அதுவும் பிறர் நலனுக்காகச் செய்தால் தான் வரும். 100 மணி நேரம் ஒற்றைக் காலில் நிற்பது செயற்கரிய செயல் தான். அதனால் பிறர்க்கு நன்மை விளையுமானால் தான் அது உண்மையான புகழுக்கும் அமரத்வத்துக்கும் காரணமாகும். ரிபு சகோதரர்கள் பிறர் நன்மைக்கான பல அருஞ்செயல்கள் செய்தனர். அதனால் பெரும் புகழ் பெற்றனர். ஸவிதாவால் தேவ நிலைக்கு உயர்த்தப்பட்டனர். தேவர்களுக்குச் சமானமாக ஹவிர்பாகம் பெறும் உரிமையையும் அமரத்துவத்தையும் பெற்றனர் என்று வேதம் கூறுகிறது.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து அம்ருதம் உண்டாயிற்று. அதைக் குடித்ததால் தான் தேவர்கள் சாகாநிலை பெற்றார்கள் என்பது புராணம். அம்ருதம் பற்றி ரிக் வேதம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மா அம்ருதாத்.
இது ஒரு பிரபலமான மந்திரம். ரிக் 7.59.12 இல் உள்ளது. யஜுர் 3.60 இலும் உள்ளது.
நறுமணமுள்ளவரும் புஷ்டி அளிப்பவருமான முக்கண்ணனை வணங்குகிறோம். வெள்ளரிப்பழம் கொடியிலிருந்து விடுபடுவது போல, நாங்கள் மரணத்திலிருந்து விடுபட அவர் உதவுவாராக. அம்ருதத்திலிருந்து விடுபடாமல் இருப்போமாக.
ம்ருத்யுஞ்ஜய மந்திரம் என்று சொல்லப்படும் இதை லட்சக் கணக்கான முறை ஜபித்தோரும் ஹோமம் செய்தவரும் இறுதியில் ஒரு நாள் மரணத்தை அடைந்து தானே தீருகிறார்கள் என்ற கேள்வி எழலாம்.
மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். உடல் அழியாமல் வாழும் வரம் அவர்கள் கேட்கவில்லை. அது யாருக்கும் சாத்தியம் இல்லை என்பது அவர்கள் அறியாதது அல்ல. உடல் அழிந்த பின்னும், ரிபு சகோதரர்களைப் போல தேவ நிலை அடைந்து இறவாப் புகழுடன் விளங்க வேண்டும் என்பது இந்தப் பிரார்த்தனையின் பொருள். எல்லோரும் ரிபுக்களைப் போல புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மருத்துவராகவோ ஆக முடியுமா?  படிப்படியாக மனிதன் தேவ நிலையை நோக்கி முன்னேறுகிறான் என்று  வேதம் காட்டுவதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.


குறிப்புகள்
 1         8.31.9, 10.62.1
2          1,164.20, 1,164.30
3          2,33.2
4          5,63.2
5          5.4.10
6          சதபத பிராமணம்14.6.4.8.16
7          8,48.3
8          9,94.4