Popular Posts

Tuesday, May 27, 2014

தேவர்கள் யார்?


தேவ என்ற சொல் ஒளி விடுதல் என்ற பொருளுடைய திவ் என்ற வேரிலிருந்து வந்தது. அதிலிருந்து தோன்றிய சொற்கள் பல உண்டு. தேவ என்ற சொல்லும், ஆகாயம் எனப் பொருள்படும் த்யௌ, தெய்வீகமான என்று பொருள் படும் திவ்ய முதலான அதன் பிற வடிவங்களும் ரிக் வேதத்தில் சுமார் 3000 தடவைகள் வருகின்றன. வேறு எந்தச் சொல்லும் இவ்வளவு அதிகமாகப் பயன்படுத்தப் படவில்லை. எனவே தேவர்கள் தாம் ரிக் வேதத்தின் முக்கியப் பொருள் என்று கொள்ளலாம்.  
ரிக் வேதம் முழுவதும் தேவர்களைப் போற்றும் துதிப் பாடல்கள் தாம். இந்திரன், அக்னி, வாயு, ஸவிதா, வருணன், மித்ரன், அர்யமான், மருத்துகள், அசுவினி தேவர் எனப்படும் இரட்டையர், பூமி, ஆகாயம், பிரஹஸ்பதி, பிரம்மணஸ்பதி, ருத்ரன் எனத் தேவர்கள் பலராவர்.
தேவர்கள் என்றால் இமையாத கண்களும், கீழே நிலத்தில் படாத கால்களும் உடையவர்கள் என்று புராணங்களில் படித்திருக்கிறோம். அதை எல்லாம் சற்று நேரம் மறந்து விட்டு ரிக் வேதத்தின் படி தேவர்கள் என்போர் யார், அவர்களின் இயல்பு என்ன என்பதைக் கவனிப்போம்.
ரிக் வேதத்தின்படி தேவர்கள் என்போர் ஒளி வடிவான உடல் உடையவர்கள். சூரியன், அக்னி முதலானோர் மட்டுமல்ல, வாயு, மருத் போன்ற நம் கண்களுக்குப் புலப்படாத தேவர்களும், நதி, நீர் போன்ற பொருட்களும் கூட ஒளி வடிவமான உடலைப் பெற்றிருப்பதாக வேதம் கூறுகிறது.
தங்கம்
தேவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கத்துடனான ஏதாவது தொடர்பு கூறப்படுகிறது. மருத்துகள் ருக்மவக்ஷஸ் (தங்க ஆபரணம் அணிந்தவர்), தங்கரதத்தில் பயணிப்பவர் என்று கூறப்படுகிறது. சவிதா ஹிரண்யபாணி (தங்கக் கையர்) எனப்படுகிறார். சந்தியா வந்தனத்தில் வரும் ஹிரண்யயேன சவிதா ரதேன ஆ தேவோ யாதி என்ற ரிக் மந்திரம், சவிதாவும் தங்க ரதத்தில் பயணிப்பவர் என்று காட்டுகிறது. பூஷன், இந்திரன் இருவரும் தங்க ஆயுதம் கொண்டவர்கள். இந்திரனின் வஜ்ராயுதம் தங்கத்தால் ஆனது. வருணனின் கவசம் தங்கத்தால் ஆனது (ஹிரண்யத்ராபி). இந்திரனே தங்க மயமானவர் என வர்ணிக்கப்படுகிறார். அவர் தன் பக்தர்களுக்கு தங்க ரதம் பரிசளிக்கிறார். ருத்ரன் தங்கம் போலப் பிரகாசிப்பவர் எனப்படுகிறார். அக்னியின் கேசமும், கொம்புகளும் தங்கமயமானவை (ஹிரண்யகேசி, ஹிரண்யச்ருங்க). மித்ரனும் வருணனும், பூமியும் ஆகாயமும் பொன் மேனி கொண்டவர்கள். மின்னல் தங்க ரதத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது.
இவை எதையும் நேர்ப் பொருளில் எடுத்துக் கொள்ளக்கூடாது. தேவர்கள் ஒளி வடிவமானவர்கள் என்பதைத் தான் இது குறிப்பிடுகிறது.
தேவர்களுக்குள்ளே சவிதா எனப்படும் சூரியன் சிறப்பிடம் பெறுகிறார். சவிதா என்ற பெயர் வரும்பொழுதெல்லாம் தேவ என்ற அடைமொழி பெரும்பாலான இடங்களில், அதாவது 60 சதவீதம் இடங்களில், வருகிறது. இதற்கு மாறாக, இந்திரனுக்கு இந்த அடைமொழி 12 சதவீத இடங்களிலும், உஷஸுக்கு 23 சதவீத இடங்களிலும், அக்னிக்கு 30 சதவீத இடங்களிலுமே கொடுக்கப்படுகிறது.
உதாரணத்திற்குக் காயத்ரி மந்திரத்தையும் அதற்கு அடுத்த இரண்டு மந்திரங்களையும் பாருங்கள்.
தத் ஸவிது: வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோ ந: ப்ரசோதயாத். 3.62.10
தேவஸ்ய ஸவிது: வயம் வாஜயந்த: புரந்த்யா பாகஸ்ய ராதிம் ஈமஹே 3.62.11
தேவம் நர: ஸவிதாரம் விப்ரா: யக்ஞை: ஸுவ்ருக்திபி: நமஸ்யந்தி தியா இஷிதா 3.62.12
யஜுர்வேதத்தின் முதல் மந்திரத்திலும் சவிதா தேவ என்ற அடைமொழியுடன் கூடவே வருகிறது.  
தேவ:: ஸவிதா ப்ரார்பயது ச்ரேஷ்டதமாய கர்மணே
சூரியனின் ஒளியைக் கருதியே இந்த அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது. இயற்கையான ஒளி கொண்ட சூரியன் தான் முதல் தேவன் என்பது ரிக் வேதத்தின் கருத்து எனலாம். சூரியனுக்கு அடுத்தபடியாக ஒளியுள்ள பொருளாகிய அக்னியும் தேவ என்ற சொல்லின் நேர்ப் பொருளுக்கு உரியதாக உள்ளது.
தேவிகள்
தேவர்களில் பெண்பாலரும் உண்டு. அவர்கள் தேவி எனப்படுகின்றனர். உஷஸ், அதிதி, பூமி, நதி, நீர் ஆகியவை பெண் தெய்வங்களாகும். த்யௌஸ் எனப்படும் ஆகாயம் பொதுவாக ஆண்பாலாகக் கருதப்பட்டாலும், ஆகாயம் பூமி இரண்டையும் சேர்த்துக் குறிக்கும் சொல்லான ரோதஸீ என்பது இரு பெண்கள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.
தேவபத்னி என்ற சொல் பல இடங்களில் வருகிறது. ஆனால் தேவர்களின் இந்த மனைவிமார்களைப் பற்றிக் குறிப்பிடும்படியான தகவல் எதுவும் இல்லை.
உறவு முறைகள்        
தேவர்களிடையே தாய், தந்தை, சகோதரன், சகோதரி ஆகிய உறவு முறைகள் இல்லை. ருத்ரனின் மகன்கள் மருத்துகள் என்றும், சூரியனின் மகள் உஷஸ் என்றும் நீரின் மகன் அக்னி என்றும் கூறப்பட்டாலும், இவற்றை நாம் நேர்ப் பொருளில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
இரண்டு உதாரணங்களைப் பார்ப்பதன் மூலம் அதற்கான காரணம் தெரியும். அக்னியை இரண்டு தாய்மார்களின் மகன் என்று கூறப்பட்டிருக்கிறது. ஒரு குழந்தைக்கு இரண்டு தாய் என்பதை நேரடியாகப் பொருள் கொள்ள முடியாது. இரண்டு அரணிக் குச்சிகளைச் சேர்த்துக் கடைந்தால் அக்னி தோன்றுகிறது என்பதைத் தான் இப்படிக் கூறுகிறது வேதம்.  
உஷா சூரியனின் மகளாகவும் கூறப்பட்டிருக்கிறாள். அவளை சூரியனின் மனைவியாகவும் வேதம் குறிப்பிடுகிறது. உண்மை என்னவென்றால், சூரியனைப் போலவே பிரகாசமாக, ஆனால் உருவத்தில் சிறியதாக இருப்பதால்  உஷா சூரியனின் மகளாகக் கூறப்படுகிறாள். தினம் தோறும் சூரியனுக்கு முன் எழுந்து விடுவதால், சூரியனிடமிருந்து இணை பிரியாமல் இருப்பதால் மனைவியாகக் கூறப்படுகிறாள்.
கருத்தை விளக்குவதற்காக அவ்வப்போது பயன்படுத்தப்படும் இந்த உறவு முறைச் சொற்களை நேர்ப் பொருளில் எடுத்துக் கொள்ளக் கூடாது. எனவே தேவர்களிடையே உறவு முறைகள் இல்லை.
வசிக்குமிடம்
தேவர்களில் பெரும்பாலானவர்கள் ஆகாயத்தில் வசிப்பவர்கள். அதனால் அவர்களுக்கு திவக்ஷஸ், த்யுக்ஷஸ் என்ற பெயர் உண்டு. நதிகள் முதலான பூமியிலேயே வாழும் சில தேவர்களும் உண்டு. ஆகாயம், நீர், நிலம் என மூன்று இடங்களில் வாழ்பவர் அக்னி.
உணவு
தேவர்களுக்கு அளிக்கப்படும் உணவின் பெயர் ஹவிஸ். அதை அவர்கள் நேரடியாக நம் கையிலிருந்து பெற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு அக்னியை நாக்காக உடையவர்கள் (அக்னி ஜிஹ்வா) என்று பெயர் உண்டு. ஹவிஸ்ஸை அக்னியிடம் சேர்ப்பித்துவிட்டால் அக்னி அதை எடுத்துக் கொண்டு போய் அவர்களுக்குத் தருவார். அதை உண்டபின் அவர்கள் யக்ஞ பூமிக்கு வருவார்கள். நாம் போட்டு வைத்திருக்கிற பர்ஹிஸ் எனப்படும் தர்ப்பை ஆசனத்தில் அமர்ந்து சோமபானத்தைக் குடிப்பார்கள்.
சோமபானம்
எல்லாத் தேவர்களும் சோமபானத்தில் விருப்பமுள்ளவர்கள் என்றாலும் இது இந்திரனுக்கு மிக விருப்பமானதாகக் கூறப்பட்டிருக்கிறது. சோமத்தினால் உற்சாகம் அடைந்த இந்திரன் பல வலிமையான செயல்களைச் சாதிக்கிறான் என்கிறது வேதம். சோம பானத்தால் மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் பல நலன்களைக் கொடுப்பார்கள் எனவும் கூறுகிறது.  
தேவர்கள் நாம் அளிக்கும் உணவை உண்டாலும் அவர்களுக்கு உணவு அவசியம் இல்லை. நாம் உணவு அளிக்காவிட்டாலும் அவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. நம்முடைய பணிவின் அடையாளமாகத் தான் அவர்கள் அதைக் கருதி ஏற்றுக் கொள்கிறார்கள். அதே போல சோமத்தைக் குடித்து மகிழ்ச்சி அடைந்தாலும் அதையும் அவர்கள் நம்முடைய பக்தியின் வெளி்ப்பாடாக எடுத்துக் கொள்கிறார்களே அன்றி சோமம் இல்லாமலும் அவர்கள் மகிழ்ச்சியாக உயிர் வாழ முடியும்.
அமரர்கள்
தேவர்கள் அமர்த்யர்கள் எனப்படுகிறார்கள். அதாவது சாகா நிலை பெற்றவர்கள். மனிதனைப் போலவோ மற்ற பிராணிகளைப் போலவோ அவர்கள் இறந்து போவதில்லை. எனவே அவர்கள் நம்முடைய பல தலைமுறை முன்னோர்களைப் பார்த்திருக்கிறார்கள். இனி வரவிருக்கும் பல தலைமுறைகளைப் பார்க்கப் போகிறார்கள்.
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யு: (பிறந்தவர் இறப்பது உறுதி) என்ற கீதை உரை தேவர்களுக்குப் பொருந்தாது. ஏனெனில் அவர்கள் பிறந்தவர்கள். ஒரு முறை அல்ல, இருமுறை பிறந்தவர்கள் என்று ரிக் 6.50.2 கூறுகிறது. ஆனால் அவர்களுக்கு இறப்பு இல்லை.
பரஸ்பர சார்பு
தேவர்கள் எல்லோருமே வலிமை, அறிவு, செல்வம் மிக்கவர்களாகக் கூறப்படுகிறார்கள். தேவர்களில் உடல் குறையோ, குணக் குறையோ, அறிவுக் குறையோ கொண்டவர்கள் எவரும் இல்லை. எல்லோருமே மனிதர் பால் அன்பு உடையவர்கள். அவர்கள் மனிதர்க்கு வலிமையின் ஊற்றாக விளங்குகிறார்கள். கூப்பிட்டால் உடனே வந்து காப்பாற்றுகிறார்கள். பிரார்த்தனை செய்து சோம பானம் கொடுத்துவிட்டால் அவர்கள் மகிழ்ந்து பசு, குதிரை, குழந்தைப் பேறு, நீண்ட ஆயுள், தங்கம், ரயி எனப்படும் செல்வம், ஆரோக்யம், வேலைக்காரர்கள் என எதை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். எல்லாத் தேவர்களும் கொடையாளிகள், ஸுதானு, தானுனஸ்பதி என்று சிறப்பிக்கப் பெறுகிறார்கள். அவர்கள் நாம் செய்யும் பிரார்த்தனையால் வலிமை பெறுகிறார்கள். இவ்வாறு தேவர்களும் மனிதரும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறார்கள்.
பேச்சு
தேவர்கள் செயல் வீரர்கள். பொதுவாக அவர்கள் பேசுவதில்லை. இந்திரன் பேசுவதாக சில சூக்தங்கள் இருந்தாலும் அவை இயற்றிய ரிஷிகளின் கருத்தே, புதிய உத்தியில் சொல்லப்பட்டனவாக அறிகிறோம்.  தேவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.
ஒற்றுமை
தேவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். வருணன், மித்ரன், அர்யமான் மூவரும் சேர்த்தே போற்றப்படுகிறார்கள். இந்திரனுக்கு மருத்துகள் உதவி புரிகிறார்கள். சில சமயங்களில் இரண்டிரண்டு தேவர்கள் சேர்த்தே வணங்கப்படுகிறார்கள். – அக்னி விஷ்ணு, அக்னி சோமன், அக்னி மருத்துகள், இந்திரன் அக்னி, இந்திரன் பிரஹஸ்பதி, இந்திரன் பூஷன்.
பகை
மனிதர்கள் தங்கள் பகைவர்களாகிய தஸ்யுக்களையும் ராட்சசர்களையும் வெல்வதற்கு தேவர்களின் உதவியை நாடுகிறார்கள். அவர்களுடன் மனிதர் சார்பாகத் தேவர்கள் போரிடுகிறார்கள். எல்லாத் தேவர்களுக்கும் ஆயுதங்களும் ரதங்களும் உண்டு. தேவர்கள் விண்ணிலும், மண்ணிலும் இடைவெளியிலும் பயணிக்கிறார்கள். கடல்களோ மலைகளோ அவர்களது ரதங்களைத் தடுப்பதில்லை.

இவ்வாறு தேவர்கள் ஆரோக்யம், சாகாமை, செல்வம், வலிமை, அறிவு எல்லாம் ஒருங்கே பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தத் துன்பமும் இல்லை. எப்பொழுதேனும் ராட்சசர்களுடன் நடக்கும் போரில் தேவர்களே வெற்றி பெறுகிறார்கள்.

Friday, May 16, 2014

வேதத்தில் என்ன இல்லை?





வேத ரிஷிகள் காலத்தில் கோவில் கிடையாது; விக்ரஹாராதனை கிடையாது; ஸந்யாஸம் கிடையாது. அத்வைத த்வைத விசிஷ்டாத்வைதப் பிரிவுகள் கிடையா; பக்தி மாத்திரந் தானுண்டு. கோவிலும் மடமும் பெளத்தமதப் பழக்கத்தால் வெளி நாடுகளிலிருந்து நமக்குக் கிடைத்த பேறுகளென்று சரித்திரக்காரர் சொல்லுகிறார்கள். ஆனால் இப்போது ஹிந்துமதப் பயிற்சிகளுள்ளே கோவிலும் சிலையும் நெடுந்தூரம் ஆழ்ந்து போய்விட்டன. ஆதலால், இப்போது ஹிந்து மதத்திலிருந்து கோவிலைப் பிரிக்க முடியாது. – பாரதி
வேதத்தில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கு முன் அதில் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பல அதில் இல்லை என்பதை அறிந்து கொள்வோம். ஆம், இன்றைய இந்து சமயத்தின் அடையாளங்களாகக் கருதப்படும் வழக்கங்களில் பெரும்பாலானவை ரிக் வேதத்தில் காணப்படவில்லை.
அவை வேத விரோதமானது என்று நிரூபிப்பது நம் நோக்கம் அல்ல. வைதிக சமயம் பல தாக்கங்களுக்கு உட்பட்டு வெளித் தோற்றத்தில் மாறி வந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டால் தான் இத்தனை மாற்றங்களையும் ஏற்றுக் கொண்ட அந்த அடிப்படை  என்ன என்பதை ஆராய முடியும். 
விநாயகர்
முதலில் பிள்ளையாரிலிருந்து ஆரம்பிப்போம். ரிக் வேதத்திலும் மற்ற வேதங்களிலும் விநாயகரைப் பற்றிய குறிப்பு இல்லை.
அது எப்படி இல்லாமல் போகும்?
கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பத
ஆநஸ் ஸ்ருண்வன் ஊதிபிஸ் ஸீதஸாதனம் 
என்ற விநாயகர் துதி வேத மந்திரம் தானே [ரிக் 2.23.1] என்று வைதிகர்கள் பாயக் கூடும்.       இந்த மந்திரம் ரிக் வேதத்தில் பிரம்மணஸ்பதி மற்றும் பிருஹஸ்பதி என்ற தலைப்பில் வரும் 19 பாடல்களில், முதலாவது பாடல். இந்தப் பாடலில் எங்கும் கணபதியின் பிற பெயர்களோ, அவரது தோற்றம் பற்றிய குறிப்புகளோ காணப்படவில்லை. அந்தப் பாடலின் மீதி வரிகளிலோ, அந்த சூக்தத்தின் மற்றைய பாடல்களிலோ கணபதி என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் பிரம்மணஸ்பதி என்ற சொல் பல முறை குறிக்கப்படுகிறது. பிரம்மணஸ்பதி தான் விநாயகர் என்று கூறுவதற்கான எந்தத் தடயமும் இல்லை. சாயணர் காலத்தில் விநாயகர் வழிபாடு பரவி இருந்தும், இது விநாயகரைக் குறிப்பதாக சாயணர் கூறவில்லை.
கணேச சூக்தம் என்ற பெயரில் ஒரு தோத்திரம் உள்ளது. இது 15 மந்திரங்கள் கொண்ட ஒரு தொகுப்பு. இதில் எதுவும் விநாயகருக்கு உரியது இல்லை. இதன் முதல் 9 மந்திரங்கள் ரிக் வேதத்தின் 8வது மண்டலம் 81வது சூக்தத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இவை இந்திரனைக் குறித்தவை. அடுத்த 2 மந்திரங்கள் முன் சொன்ன 2வது மண்டலம் 23வது சூக்தத்தில் உள்ளவை. பிரம்மணஸ்பதியைப் போற்றுபவை. மற்ற 4 மந்திரங்கள் ரிக் வேதம் 10.112 இல் 9வது, 10வது பாடல்களாக உள்ளன. இவையும் இந்திரனைத் துதிப்பவையே.
ஒரு புதிய தெய்வம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பது பற்றிக் கவலைப்படாமல், அந்த்த் தெய்வத்திற்கு ஏதேனும் ஒரு வேதப் பாடலைப் பயன்படுத்துவது வழக்கம் என்பதற்கு இது ஒரு  உதாரணம். இன்று நாம் சடங்குகளில் பயன்படுத்தும் மந்திரங்கள் அந்தச் சடங்கோடு தொடர்புடைய பொருள் கொண்டவை அல்ல. (இது பற்றிப் பின்னர் வரும் ஒரு தலைப்பில் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.)  
சிவன்
வேதத்தில் சிவ வழிபாடு இல்லை. சிவ என்ற சொல் இருக்கிறது. மங்களகரமான என்ற பொருளில் இது பல தேவர்களுக்கு அடைமொழியாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ருத்ரன் இருக்கிறார். ஆனால் ருத்ரனும் சிவனும் பிற்காலத்தில் ஒன்றாக்கப்பட்டார்களே அன்றி வேதம் கூறும் ருத்ரனுக்கு இன்றைய சிவனுக்குரிய அம்சங்கள் இல்லை.  
ரிக் வேதத்தில்  ருத்திரனைப் பற்றிய  குறிப்புகளைப் பார்த்தால், பல இடங்களில் மருத் என்னும் தெய்வத்தின் தந்தை ருத்திரன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. [உ-ம் ரிக் 1.85.1] சில இடங்களில் மருத்துகளே ருத்திரர்கள் என்று கூறப்பட்டுள்ளது.   [உ-ம் ரிக் 1.39.4,] இன்னும் சில இடங்களில் ருத்திரன் அக்னியின் மறுபெயராகக் கருதப்படுகிறார். [உ-ம் ரிக் 1.72.4,] சில இடங்களில் ருத்திரன் அஸ்வினி தேவர்களோடு ஒன்றாகக் கருதப்படுகிறார். [உ-ம் ரிக் 1.158.1] அவ்வகையில், காற்றாகவும், தீயாகவும், அஸ்வினி தேவர்களாகவும் இன்னும் பிறவாகவும் விளங்கும் பரம் பொருளைச் சில இடங்களில் ருத்திரன் என்று வேதம் அழைக்கிறது என்று தான் சொல்ல முடியும்.
ஒரே ஒற்றுமை சொல்ல வேண்டும் என்றால், ரிக் வேதத்தில் பல இடங்களில் நலம் தரும் மருந்துகளுடன் வந்து நோய் நீக்குபவராக ருத்திரன் கூறப்படுகிறார். [உ-ம் ரிக் 1.43.4, 2.33.4] இது சிவனை வைத்திய நாதன் என்று இன்று நாம் வழங்குவதுடன் ஒக்கிறது.
யஜுர் வேதத்தின் ருத்ரம் (4வது காண்டம் 5வது பிரபாடகம்) இன்று சிவ வழிபாட்டில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் மந்திரம். அதில் கூறப்படும் ருத்திரனின் பண்புகளில் சில சிவனுடைய பண்புகளுடன் ஒத்திருந்தாலும், ஒவ்வாதவையும் பல உள்ளன.
            கோபமே வடிவானவர் என்பது ருத்திரனுக்கும் சிவனுக்கும் பொதுவான அம்சம். சிவன் யானைத் தோலையும் புலித் தோலையும் அணிந்தவர் என்று இன்று நாம் வழங்குவதற்கு இயைய யஜுர் 4.5.10.10 மிருகத் தோலை அணிந்தவர் ருத்திரன் என்று கூறுகிறது. யஜுர் 1.8.6.9 ருத்திரனை த்ரயம்பகன் (முக்கண்ணன்) என்கிறது.
இனி, முரண்பாடுகளைப் பார்ப்போம். பப்லுசாய என்பதற்கு எருதின் மேல் இருப்பவர் என்றும் ஸோம என்பதற்கு உமையோடு கூடியவர் என்றும் தற்போது பொருள் கூறப்படுகிறது. ஆனால் சாயணர் பப்லுசாய என்பதைப் பழுப்பு நிறத்தவர்என்று எழுதுகிறார். ஸோம என்ற சொல்லுக்கு ஸோமக் கொடி என்னும் தாவரம் என்று பொருள் தருகிறார். தற்போது வழங்கும் இவ்விரண்டு பொருள்களும் சாயணருக்குப் பிந்திய காலத்தில் ஏற்பட்டதாக இருக்கலாம். மாதொரு பாகன் என்ற கருத்தை வேதத்தில் காண முடியவில்லை. அம்பிகா ருத்திரனின் சகோதரியாகக் கூறப்படுகிறார்.   [யஜுர் 1.8.6.6]
தற்போதைய வழக்கு, சிவனை நீலகண்டன், சடையன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் ருத்திரன் கழுத்து கறுத்தவர், கழுத்து வெளுத்தவர் என்று இருவகையாகவும் கூறப்பட்டுள்ளார் (நீலகண்டர், சிதிகண்டர் - யஜுர் 4.5.5.1). அதே போல, சடையர் என்றும் மொட்டைத் தலையர் என்றும்  கூறப்பட்டுள்ளார் (கபர்தினர், வ்யுப்தகேசர் - யஜுர் 4.5.5.1).
மேலும், வேதத்தில் ருத்திரன் என்ற பெயர் ஒருமையிலும் வருகிறது, ருத்திரர்கள் என்று பன்மையிலும் பேசப்படுகிறது. தேவர்கள் நிலத்தில் 11, நீரில் 11, ஆகாயத்தில் 11 பேர் உள்ளனர் என்று ரிக் 1.139.11 கூறுவதை யஜுர் 1.4.10.1 மற்றும் யஜுர் 1.4.11.1 ருத்திரர்களாக எடுத்துக் கொள்கிறது. ஆயிரக் கணக்கில் உள்ளவர்கள் என்று யஜுர் 4.5.11.1 கூறுகிறது. வசுக்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள் என்று மூன்று தெய்வக் கூட்டங்கள் பல இடங்களில் சேர்த்தே சொல்லப் படுகின்றன. (உதாரணம் - யஜுர் 1.1.11.16)
இந்த மந்திரங்களிலிருந்து ருத்திரனின் தன்மை இத்தகையது என்று நிர்ணயிக்க முடியாத நிலையில், வேத தெய்வமான ருத்திரனின் மாற்றுருவமே சிவன் என்று சொல்வதை விட, சிவன் என்னும் கருத்து உருவாகிய பின், அவருடைய வழிபாட்டுக்கு, ருத்ரனைக் குறித்த வேத மந்திரங்கள்  பயன்படுத்தப்பட்டன என்று கூறுவதே பொருந்தும்.
திருமால்
வேதத்தில் திருமால் இருக்கிறாரா? விஷ்ணு என்ற சொல் இருக்கிறது. அது எங்கும் வியாபித்த சூரியனைக் குறிப்பதாகத் தான் உள்ளதே அன்றி இன்று நாம் வணங்கும் திருமாலைக் குறிக்கவில்லை. விஷ்ணு மூன்று அடி வைத்தது அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. அது சூரியனின் (காலை, பகல், மாலை ஆகிய) மூன்று நிலைகளைக் குறிப்பதாகத் தான் சாயணர் கூறுகிறார். நாராயணன் என்ற பெயர் ரிக் வேதத்தில் இல்லை.
தைத்திரிய ஆரண்யகத்தில் வரும் நாராயண சூக்தத்தில் விஷ்ணுவும் நாராயணனும் ஒன்று என்பதற்கான குறிப்பு இல்லை.
இன்று திருமால் வழிபாட்டில் பெருமளவு பயன்படுத்தப்படும் புருஷ சூக்தத்தில் விஷ்ணு என்ற பெயரும் நாராயணன் என்ற பெயரும் இல்லை. இவை பிற்காலத்தில் ஒன்றாக்கப்பட்டவை.
பிற தெய்வங்கள்
இன்று பெரும்பாலான மக்கள் முருகன், லட்சுமி முதலான தெய்வங்களையும், மாரியம்மன், ஐயனார் முதலான கிராமத் தெய்வங்களையும் வணங்குகிறார்கள். இவர்களுக்கு வேத மந்திரம் சொல்லி பூஜை செய்யப்படுவதையும் காண்கிறோம். இந்த தெய்வங்கள் எதுவும் வேத இலக்கியத்தின் அடிப்படை நூலான ரிக் வேதத்தில் இல்லை.
கோயில்கள் இல்லை, விக்கிரக ஆராதனை இல்லை. இன்று எந்த அர்ச்சனை செய்தாலும் ஒவ்வொரு பெயருக்கு முன்னாலும் ஓம் என்று சேர்த்துச் சொல்கிறோமே, அந்த ஓங்காரம் ரிக் வேதத்தில் இல்லவே இல்லை. அதைப் பற்றி பின்னர் வந்த உபநிடதங்கள் தாம் வானளாவப் புகழ்கின்றன.
அபிஷேகங்கள், அலங்காரங்கள், உற்சவங்கள் இல்லை. பஞ்ச பூதக் கோட்பாடு இல்லை. அஹிம்ஸைக் கொள்கை, கர்மாக் கொள்கை, மறு பிறப்பு, மோட்சம், சொர்க்கம், நரகம், பித்ரு லோகம், வைதரணி நதி எதுவும் இல்லை.
பிரம்மசர்யம் முதலான ஆசிரமங்கள் இல்லை. பிராமண க்ஷத்ரிய முதலான வர்ணப் பிரிவுகள் பற்றிய குறிப்பு இல்லை. ரிக் வேதத்தில் வரும் பிரம்ம என்ற சொல் நான் முகக் கடவுளைக் குறிப்பது அல்ல. உபநிஷத்துகள் கூறும் உருவமற்ற குணமற்ற பரம்பொருளையும் குறிப்பது அல்ல. பிரம்ம என்ற சொல் பிரார்த்தனை மந்திரம் என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரார்த்தனை சொல்பவர் ப்ரஹ்மணர் என்றும் ப்ராஹ்மணர் என்றும் கூறப்பட்டுள்ளார். இது வர்ணத்தையோ ஜாதியையோ குறிப்பதல்ல. 
இவை எல்லாம் காலப் போக்கில் இந்து சமயத்தில் ஏற்பட்டு அதனை வளர்த்தவை.
இந்து சமயத்தின் வேர் வேதங்கள். அந்த வேதங்களுக்குள்ளே ஆணி வேரான ரிக் வேதமே பழமையானது; மற்ற வேதங்களுக்கும், பிராமணம், ஆரண்யகம், உபநிடதங்களுக்கு எல்லாம் ரிக் ஸம்ஹிதையே அடிப்படை என்கிறோமே, அது எந்த அடிப்படையில்? பிற்காலத்தில் பல மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வழி வகுத்த அதன் தனித்தன்மை என்ன? மாற்றங்கள் ஏற்பட்ட பின்னும் வேதமே அடிப்படை என்கிறோமே அப்படிக் கூறுமளவுக்கு வேதத்தின் எந்தக் கருத்து இன்று வரை மாறாமல் இருந்து மாற்றங்களை எல்லாம் வரவேற்று சமயத்தை வளர்த்து வருகிறது?    
பாமரன் புதுக் கோணத்தில் பார்க்க முயன்றான். வேதத்தின் மையக் கருத்து என்ன என்று தெரிந்து கொண்டால் அதற்கு மாறானவற்றை இடைச் செருகலாகக் கருதி அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மற்ற பகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தலாம், மையக் கருத்தைத் தெரிந்து கொண்டு விட்டால் அதோடு தொடர்பு படுத்தி இது வரை புரியாத பல மந்திரங்களை அறிந்து கொள்ள முடியும் என நம்பினான்.
மையக் கருத்தை எப்படிக் கண்டு பிடிப்பது? எந்தக் கருத்து திரும்பத் திரும்பப் பேசப்படுகிறதோ, வலியுறுத்தப்படுகிறதோ அதுவே மையக் கருத்தாகக் கொள்ளலாம். அடிக்கடி வரும் சொற்களை மட்டும் தனியாகப் பிரித்து சிறப்பான கவனம் செலுத்திப் பார்க்க முயன்றான். அப்படி அடிக்கடி வரும் சொற்கள் யாவை? தேவ, யக்ஞ, ருதம் என்ற மூன்று சொற்களே ரிக் வேதத்தில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட சொற்கள். இவற்றின் விளக்கத்தை அடுத்தடுத்த அத்தியாயங்களில் காணலாம்.